பிச்சைக்காரன் கட்டிய வீடு!
“நான் மட்டும் இந்த கலியாணத்துக்கு சம்மதிக்கலேன்னா… வீடும், கூடும் இல்லாத இந்த பிச்சக்கார பயலுக்கு எவன் பெண்ணு குடுத்திருப்பான்?” கழுத்து நரம்பு புடைக்க பேசிவிட்டு அந்த மனிதன் வெளியே வந்த போது நான் அமைதியாக இராஜன் அத்தான் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தேன்.
எங்களது வீட்டுக்கென்று ஒரு மரியாதை இருந்தது அப்பா உயிரோடு இருந்தவரை. ‘வண்டாவிளை பட்டாளத்துக்காரன்’ என்றால் சுற்று வட்டாரம் முழுவதும் தெரியும். அது அப்பாவுக்கான மரியாதை!
எனது திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக நீங்கா துயில் கொண்டு விட்ட அப்பாவின் இழப்பு வேறெந்த வகையிலும் ஈடு செய்ய இயலாத நிலையில் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்து பெண் வீட்டார் ‘வீடு காணும் நிகழ்வுக்காக’ வந்திருந்த போது எங்களது உறவினர் ஒருவர் “சுமங்கலா-ளுக்கு தலைக்கு வெளி இல்லியா? பிள்ளைய இல்லாத இங்க கொண்டுபெய் பெண்ண குடுத்திருக்கியா!” என்று கூறி பரிகசித்திருந்தும், அவரது மகளுக்கு எனது கையால் கர்ப்பகாலத்து (யாக்கோட்டி) பண்டம் ஒன்றை கொடுக்க வைத்தது காலம். இன்று இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா நான்! இருவரும் ஆண் மக்கள்!!
காலம் பல்வேறு கட்டங்களாக தனது காற்குளம்புகளால் சிலருக்கு தக்க பாடம் புகட்டிக்கொண்டே வருகின்றது என்னோடு.
கஸாப் மருத்துவமனையில், ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் ‘பயோ-மெடிக்கல் துறையில்’ பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, இப்போது வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தின் பணிநியமன உத்தரவை அப்போது பெற்றுக்கொண்டு ஊருக்கு பறந்தவன்தான்… அப்பாவின் பாடுகள், திருமண நிச்சயதார்த்தம், பத்திரிக்கை, திருமண ஏற்பாடுகள், அப்பாவின் மறைவு, திருமணம், மனைவியின் கர்ப்பம், திருமண கடன்கள் என ஏக ‘பிஸி’யாக இருந்த நேரம். பல்வேறு இடங்களிலும் இருந்து வாங்கிய கடன்கள் மனைவியின் நகைகளை வங்கிக்கு அனுப்பியது. அதில் சில கருத்து வேறுபாடுகள் எனக்கும் மனைவிக்கும் இருந்தாலும் சில மூன்றாவது நபர்கள் உள்ளே நுழைந்து பெரிதாக்க முயற்சித்தது சற்றே வலியைத்தந்தது.
பெரும்பாலும் ‘மணவிலக்கு’ (விவாகரத்து) பெறும் தம்பதியருக்கு நடுவில் மூன்றாவது நபர்களின் தலையீடு கண்டிப்பாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ இருக்கும்; இருந்திருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் துணையைப் பிரிந்து வாழ்பவரெனில், உங்களை நீங்களே அலசிப்பார்க்கும் போது தெளிவாக புரியும் ஏன் நான் என் மனைவியைப்பிரிந்தேன் என்று! வெறும் காசு தேறாத காரணத்தை உறவுகளோ, நட்புக்களோ ஊதிப்பெரிதாக்கி உங்கள் முன் படைத்திருப்பார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கையை இழந்திருப்பீர்கள்.
2011 செப்டம்பர் மாதம் 15-ல் திருமணம் முடிந்தது; மறுவாரமே முதற்பகுதி நகைகள் வங்கியில் தஞ்சம் கொண்டன. அடுத்த வாரத்தில் அடுத்தபகுதியென, தாலி மற்றும் சொற்ப நகைகள் தவிர்த்து அனைத்துமே வங்கியில் சோர்ந்து படுத்திருந்தன. மனைவியின் கண்ணீர், அவளது உறவினர்களின் குத்தீட்டி சொற்கள் என, நட்டநடுச்சாலையில் ஆடைகளைக்களைந்து நிற்பவனுக்கு நிகரான அவமானமும், கேவலமுமாக என்னைப்பிடுங்கித்தின்னத் தொடங்கின. பணியோலை பெற்று வந்த நிறுவனத்தில் வேலைக்கான ‘விஸா’ கிடைப்பதில் தாமதம் ஏற்பட செலவுக்கே பெரும்பாடான நிலை. ஆனால் எத்தனை பேர் தூற்றினாலும் எனது மாமனார் வீட்டில் ஒரு சிறு கீறல் கூட இல்லை எனக்கான மரியாதையில். அவ்வகையில் சற்றே நிம்மதி கொண்டிருந்தேன்.
திருமணமான புதிதில் அவளது உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அந்த வீட்டுக்கும் சென்றிருந்தோம்.
“ரெண்டு வருஷம் மஸ்கட்-ல இருந்தன்னு சொல்லிய. என்னத்த மீதி எடுத்த நீ? எல்லாத்தையும் வீட்டில குடுத்தியோ? பிள்ளைக எல்லா உருப்படியும் இப்பமே பெய்யாச்சே! கல்யாணம் எடுக்குக்கு முன்ன சம்பாதிக்கணும். இனி அப்ப வீடு? அது எளையவனுக்கா ”
சோறு சாப்பிட்டபின் இந்த வார்த்தைகளை கேட்கவேண்டியதாக போய்விட்டது. மரியாதை என்ற ஒன்றை இழந்தபின் என்ன உறவு? என்ன சொந்தம்? அன்று அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தது. சுமார் ஏழாண்டுகள் கடந்து விட்டன. இத்தனைக்கும் அவர் எனது மாமியாரின் தங்கைகளில் ஒருவர்!
“ரெண்டு வருஷம் மஸ்கட்-ல இருந்தன்னு சொல்லிய. என்னத்த மீதி எடுத்த நீ? எல்லாத்தையும் வீட்டில குடுத்தியோ? பிள்ளைக எல்லா உருப்படியும் இப்பமே பெய்யாச்சே! கல்யாணம் எடுக்குக்கு முன்ன சம்பாதிக்கணும். இனி அப்ப வீடு? அது எளையவனுக்கா ”
சோறு சாப்பிட்டபின் இந்த வார்த்தைகளை கேட்கவேண்டியதாக போய்விட்டது. மரியாதை என்ற ஒன்றை இழந்தபின் என்ன உறவு? என்ன சொந்தம்? அன்று அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தது. சுமார் ஏழாண்டுகள் கடந்து விட்டன. இத்தனைக்கும் அவர் எனது மாமியாரின் தங்கைகளில் ஒருவர்!
சில நேரங்களில் எழும் அவமானமும், வலியும், வெறியும், வைராக்கியமும் சிலரை கொலை செய்யத் தூண்டும், சிலரை தற்கொலைக்குத் தூண்டும் இன்னும் சிலரை சாதிக்கத்தூண்டும். கடைசி வரிசையில் நான்.
அடுத்து வந்த நாட்களில் சில உறவினர்கள் வீட்டுக்கு சென்று வந்தபின், கொல்லக்குடிவிளை இராஜன் அத்தான் வீட்டுக்கு சென்றோம். அங்கே குடும்பத்தில் வயதான மாமா, மாமி இருக்கின்றார்கள். நாங்கள் சென்றிருந்த நேரம், மேலே குறிப்பிட்ட நபரின் கணவரும் வந்தார். வெளியில் மழை தூறிக்கொண்டிருந்தது. நானும், மனைவியும், வீணாவும் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தோம். சற்று போரடிக்க வீட்டுக்குள் திண்ணையில் சென்று அமர்ந்தேன். அப்போது அந்த மனிதன் அந்த வீட்டின் மாமா, மாமியிடம் உச்சஸ்தாயியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தான் உள்ளறையில் இருந்து. சரி, நமக்கேன் வம்பு என்று அருகில் கிடந்த பத்திரிக்கையை அன்று நான்காம் முறையாக புரட்டியபோதுதான் தெரிந்தது அவன் என்னைப்பற்றித்தான் குறிப்பிடுகிறான் என்று.
“நான் மட்டும் இந்த கலியாணத்துக்கு சம்மதிக்கலேன்னா… வீடும், கூடும் இல்லாத இந்த பிச்சக்கார பயலுக்கு எவன் பெண்ணு குடுத்திருப்பான்?” கழுத்து நரம்பு புடைக்க பேசிவிட்டு அந்த மனிதன் வெளியே வந்த போது நான் அமைதியாக இராஜன் அத்தான் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தேன். என்னை அங்கே எதிர்பார்க்காத அவனது முகத்தில் அதிர்ச்சி கலந்த வெளிறிய புன்னகை. அதுபோலவே அந்த மாமா, மாமியிடமும். திரும்பி வரும்போது மனைவி கேட்டாள் ‘ஏன் ஒரு மாதிரி இருக்க?’ பதிலுக்கு சிறிய புன்னகை மட்டுமே என்னிடமிருந்து.
வேறு சில முக்கியமான (வெளியில் சொல்லவியலா) காரணங்கள் இருந்தாலும், என்னை பிச்சைக்காரன் என்று ஏளனமாக குறிப்பிட்ட அந்த நபரின் வார்த்தைகள் இன்றும் கூட இதோ இப்போதும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
பிச்சைக்காரனின் வீட்டில் பணக்காரர்களுக்கு இடமுண்டு; பணத்திமிர் பிடித்தவர்களுக்கு அல்ல!
இன்று எனது வீடு சுமார் நாற்பது இலட்சங்களை முழுமையாய் விழுங்கி விட்டு எழுந்து நிற்கின்றது கம்பீரத்தோடு! அதில் கடன் இருந்தாலும் ஒரு ஆனந்தம்!
இந்த பிச்சைக்காரனின் வீடு எழும்பியதில் அப்பா வகையில் அம்மாவிடமிருந்து கிடைத்த ஏழு இலட்சங்கள், மீதி அனைத்தும் என் மனைவிக்கு அவளது வீட்டில் கொடுத்த நகைகளும், எங்களது சிறிய சேமிப்பும், மச்சான் மற்றும் மாமா, மாமி, அவளது தங்கை மற்றும் கணவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும், எல்.ஐ.சி-யின் கடனும் என்பதனை நான் கூறியே ஆகவேண்டும்
அம்மாவிடமிருந்து எல்லா காசையும் வாங்கிக்கொண்டுதான் என் வீட்டை நான் கட்டி இருக்கின்றேன் என்றெண்ணுகின்ற சில உறவுகள். ஒன்றாயிருந்த தேன்கூடு கலைந்து விட்டது. இனி அவரவர்க்கு வீடுகளையோ, கூடுகளையோ கட்டிக்கொண்டாக வேண்டும் எனும் நிர்ப்பந்தம். சகோதரர்கள் திருமணமான பின்பும் சகோதரர்களாகவே வாழ்வது என்பது ஒரு வரம். சில வல்லூறுகள் நண்பர்கள் என்கிற போர்வையில் தூண்டி விட்டு குளிர்காய்வதை புரிந்து கொண்டாலே பல பிணக்குக்களும் தீர்ந்துவிடும். பணம் ஒருபோதும் நம் பிணத்திற்குப்பின் வரப்போவதில்லை! அவ்வளவுதான்… எளிய தத்துவம்!!
அம்மா, அக்கா, அத்தான் என அனைவருமே ஊக்கத்தையும், பின்னாலிருந்து தட்டிக்கொடுத்தலும் செய்திருந்தாலும்… களப்பணி என்று ஒன்று இருக்கின்றது. வீட்டுக்காக கடை வியாபாரத்தை தள்ளி வைத்து விட்டு மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் மாமனார், எப்போதெல்லாம் பணமுடை வருகிறதோ அப்போதெல்லாம் ஏதேனும் வகையில் புரட்டி தந்த மச்சான், ஒரு திருவிழா போல இந்த வீட்டை பார்த்துக்கொண்டிருக்கும் மாமியார் என தரையில் கிடந்தவனை தூக்கி துண்டுடுத்தி அமரவைத்திருக்கின்றார்கள். இப்போது கம்பீரமாய் வீட்டை பார்க்கின்றேன்!
ஒவ்வொருமுறை தளரும்போதும் ஊக்கம் தரும் மனைவி, சில நேரங்களில் கண்ணீர்த்துளி விழும் அவள் கண்கள்… அதற்கு பயந்தேனும் ஓட்டத்தை முடிக்க வேண்டும் என்ற உந்துதல் என மெதுவாக டிசம்பர் 13-க்கு அருகில் வந்து விட்டோம்.
இப்போது உங்களை அழைக்கின்றோம் எங்கள் வீட்டின் விழாவுக்கு!
அன்பு வாழ்த்துக்களை கூடைகளில் கொண்டு வாருங்கள்…
வாழ்த்துக்களை விட்டுவிட்டு செல்லுங்கள்!
மறுமுறையும் இதே அன்போடு வாருங்கள்!
அழைப்பு மணியில் உங்களது புன்னகையை பதித்துவிடுங்கள்;
அது மறுமுறை வாசலை திறந்தே விட்டிருக்கும் உங்களுக்காக!
-ஜெயன் வர்கீஸ்21.11.2018